என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தபோது எடுத்த படம்
சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை
- பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட “கியூ” காணப்பட்டது.
- கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் ”சூட்கேஸ்”, கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
கடந்த 16-ந்தேதி முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.
சபரிமலை சீசன் தொடங்கிய நாள் முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த சீசனையொட்டி இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
இதனால் பகவதி அம்மன் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ"வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிமூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.






