என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த நபர் கைது
- மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டுள்ளார்.
- மனைவி வான்மதி தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தேடி வகின்றனர்.
மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ. 45.4 லட்சம் மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி வான்மதி தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தேடி வகின்றனர்.
சென்னை, கே.கே நகர், 45வது தெருவில் வசித்து வருபவர் மதியழகன். இவர், கடந்த 16 வருடங்களாக தனியார் நிறுவனத்தில் மருந்தாளுநர் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு தொழில் ரீதியாக கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமான மருத்துவர் வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட் ஆகிய இருவரும் சேர்ந்து, தமிழ்நாடு மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்களை நன்கு தெரியும் என்றும், மருத்துவதுறையில் அரசு வேலைக்கு ரூ.7 லட்சமும், மின்சாரதுறையில் அரசு வேலைக்கு ரூ.3 லட்சமும் கொடுத்தால், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
அதன்பேரில், மதியழகன் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என்று சுமார் 15 நபர்கள் சேர்ந்து பணம் ரூ.45,41,000/-ஐ வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட்யிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் இதுவரை அரசு வேலை வாங்கித்தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வருவதாக மதியழகன், கடந்த 02.03.2025 அன்று போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில், R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து, மோசடியில் ஈடுபட்ட பினகாஷ் எர்னஸ்ட் என்பவை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மனைவியை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பினகாஷ் எர்னஸ்ட் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.






