என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

Iran War | கரூர் ஜவுளித் தொழில் கடும் பாதிப்பு: ரூ.10,000 கோடி ஏற்றுமதி தேக்கம்
- பெட்ரோலியப் பொருளான இதை ரிலையன்ஸ் நிறுவனம் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
- போருக்கு முன் கிலோ ரூ.112-க்கு விற்கப்பட்ட பாலியஸ்டர் பைபர், தற்போது 40 சதவீதம் வரை விலை உயர்ந்துவிட்டது
கரூர்:
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் உலக அளவில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் போரின் எதிரொலியாக, இந்தியாவின் ஜவுளித் துறைக்குத் தேவையான பாலியஸ்டர் பைபர் (பாலிஎத்திலீன்) எனும் முக்கிய மூலப்பொருள் இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு, கப்பல் போக்குவரத்தும் நின்று போனதால் கரூரில் உற்பத்தியான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்துள்ளன. இது ஏற்றுமதியாளர்களையும், பல லட்சம் தொழிலாளர்களையும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகியும், ஹோம்லைன் டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளருமான ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூரில் உற்பத்தியாகும் மேஜை விரிப்புகள், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இந்தத் தொழிலில், பருத்தி நூலுடன் கலக்கப்படும் பாலியஸ்டர் பைபர் பால்ஸ் மிக முக்கியமானது. பெட்ரோலியப் பொருளான இதை ரிலையன்ஸ் நிறுவனம் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது போர் காரணமாக வளைகுடா நாடுகள் ஆலைகளை மூடி விட்டதாலும், இந்தப் பொருட்களை ஏற்றி வந்த 3,200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஆங்காங்கே நடுக்கடலில் நிறுத்தப்பட்டு உள்ளதாலும் மூலப்பொருள் வரத்து நின்றுபோய் விலை உயர்ந்துள்ளது.
போருக்கு முன் கிலோ ரூ.112-க்கு விற்கப்பட்ட பாலியஸ்டர் பைபர், தற்போது 40 சதவீதம் வரை விலை உயர்ந்துவிட்டது. ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்த விலையின்படி பொருட்களை அனுப்பினால் ஏற்றுமதியாளர்களுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
மேலும், ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட கப்பல்களும் கரை சேர முடியாமல் தவிக்கின்றன. எனவே, பிரதமர் மோடி உலக நாடுகளுடன் பேசி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி மூலப்பொருட்களின் விலை உயர்வையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.






