பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தால்.. ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தால்.. ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு
Published on

சென்னை:

பள்ளிகளில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆசிரியர் மீது பெறப்படும் புகார்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.

மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுவது மிக மிக அவசியம். இந்த விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்தக்கூடாது. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் 'மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அதை தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். 'மாணவர் மனசு' புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com