என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகிறார்கள்
- சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது.
- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீப காலமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடல் சோர்வு, வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. சிகிச்சை பெற்றாலும் உடனடியாக குணமாவதில்லை. சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்கிறது. இந்த காய்ச்சலால் நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் டெங்கு, நிமோனியா போன்ற இணை காய்ச்சல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:-
சென்னையில் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இருமல், சளியுடன் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது 70 சதவீதத்துக்கு மேல் 'இன்புளூயன்ஸா' காய்ச்சல் பாதிப்பு தான் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
மழை விட்டு விட்டு பெய்வதால் நன்னீரில் வளரக்கூடிய 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கமாக வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும்.
எனவே திறந்தவெளி இடங்கள், வீடு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்து, முககவசம் அணிவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






