என் மலர்tooltip icon

    உலகம்

    சவுதி அரேபியா, குவைத்தை தொடர்ந்து துபாயில் அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல்
    X

    சவுதி அரேபியா, குவைத்தை தொடர்ந்து துபாயில் அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல்

    • தூதரக கட்டிடத்தில் தீப்பிடித்து கரும்புகை எழும்பியது.
    • அமெரிக்காவின் உளவுத்துறை நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது. சவுதி அரேபியா, குவைத்தில் அமெரிக்க தூதரகங்கள் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தூதரக கட்டிடத்தில் தீப்பிடித்து கரும்புகை எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறும்போது,"துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அனைத்து அமெரிக்க ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார்.

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் உள்ள அமெரிக்காவின் உளவுத்துறை நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவின் தென்மேற்கே அமைந்து உள்ளது. இந்த விமானப்படை தளம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

    கத்தாரின் ராஸ் லபான், மசயீத்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டன. பக்ரைன் முழுவதும் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.

    வளைகுடா நாடுகள் மீதான தனது தாக்குதலை ஈரான் தொடர்ந்து நடத்தி வருகிறது. இன்று துபாய், அபுதாபி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதற்கிடையே சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகள் 9 டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்தது.

    இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர் தாக்குதல் நடத்தியது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் ஜெருசலேமில் விழுந்து வெடித்தன. டெல் அவிவ் நகரின் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன.

    இதில் சில பகுதிகளில் வெடிமருந்துகளின் குப்பைகள் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல் இஸ்ரேல் முழுவதும் ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

    Next Story
    ×