என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு
- தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமான கட்டணங்கள் 2 மடங்கு அதிகரித்து உள்ளன.
- நாளை தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால், விமான கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
ஆலந்தூர்:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி,கோவை செல்லும் ஏராளமானோர் விமான பயணத்தை தேர்வு செய்து உள்ளனர். இதன் காரணமாக உள்நாட்டு விமான முனையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அலைமோதுகிறது. இதனால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமான கட்டணங்கள் 2 மடங்கு அதிகரித்து உள்ளன.
சென்னை-தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.4,109 ஆகும். இன்று விமான கட்டணம் ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உள்ளது. இதேபோல் மதுரைக்கு ரூ.11,749 முதல் ரூ. 17,745 வரையும், திருச்சிக்கு ரூ.8,211 முதல் ரூ.10,556 வரையும், கோவைக்கு ரூ.7,872 முதல் ரூ.13,428 வரையும், சேலத்திற்கு ரூ.8,353 முதல், ரூ.10,867 வரையும் கட்டணமாக உள்ளது.
நாளை தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால், விமான கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதைப்போல் திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் ,டெல்லி, கொல்கத்தா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் உயர்ந்து உள்ளன.






