என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூரில் ஏற்பட்ட துயரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது: காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால்
- கரூர் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு கரூரில் சம்பவம் நடந்த பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடினர்.
கரூர்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.க்கள் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடினர்.
பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர். அப்போது கரூர் எம்.பி. ஜோதிமணி, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில், கரூர் பயணம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் ஏற்பட்ட துயரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் தனியாக இல்லை என்ற செய்தியை அனுப்பி உள்ளோம். உண்மையில் முழு தமிழகமும் இந்தியாவும் வேதனையில் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் முழு நாடும் உங்களுடன் உள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தமிழக மக்களுடன் உள்ளன என பதிவிட்டுள்ளார்.






