என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.
    • இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர்.

    சென்னை:

    கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உருவச்சிலை ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இவ்விடத்தில் உள்ள கலைவாணரின் உருவச் சிலையினை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்த அவரது உருவச் சிலையினைப் புதுப்பித்து சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என அறிவித்தார்.

    அதன்படி, சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    தமிழ்த் திரைப்படத்துறையில் கலைவாணர் என அழைக்கப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞராகத் திகழ்ந்தார்.

    தமிழில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர். இவர் உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.

    இவர் சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதனால் தான் இவருக்கு, "கலைவாணர்" என்ற பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×