என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் - மானிய தொகைகளை #MKStalin வழங்கினார்
- அரசு மானியமாக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 25 சதவிகித மானியம் (அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை) வழங்கப்படுகிறது.
- ரூ.27.01 கோடி மானியத்திற்கான 2,261 விண்ணப்பங்களுக்கு கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பெண் தொழில்முனைவோர்கள், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று புதிய தயாரிப்பு, சேவை அல்லது வணிக நிறுவனங்களை தொடங்கவும், தொழில் விரிவாக்கத்திற்காக கடன் பெற விரும்பும் கலைஞர் கைவினைத் திட்ட பெண் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கூடுதல் கடன் பெறவும், அரசு மானியமாக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 25 சதவிகித மானியம் (அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை) வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும், 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்/மூன்றாம் பாலின தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம், மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வித்தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதும் இல்லை.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 261.93 கோடி ரூபாய் மானிய மதிப்பிலான 22 ஆயிரத்து 356 விண்ணப்பங்கள் இணைய வழியாக பெறப்பட்டு அவற்றில் ரூ.160.89 கோடி மானிய மதிப்பிலான 13 ஆயிரத்து 779 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.27.01 கோடி மானியத்திற்கான 2,261 விண்ணப்பங்களுக்கு கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மானியத்தொகைக்கான காசோலை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், இயக்குநர் நிர்மல் ராஜ் கலந்து கொண்டனர்.






