என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலை உணவுத்திட்டம் என்பது சமூக முதலீடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    காலை உணவுத்திட்டம் என்பது சமூக முதலீடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • குழந்தைகளின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.
    • ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் சென்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அவரு டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் காலை உணவை சாப்பிட்டனர்.

    அங்கு நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காலையிலே இங்கே வந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட்ட உடனே இந்த குழந்தைகள் மாதிரி எனக்கும் 'எனர்ஜி' வந்திருச்சு.

    எப்படி இன்றைக்கு முழுக்க நீங்கள் ஆக்டிவ் ஆக இருப்பீர்களோ, அப்படி எனக்கும் இது ஆக்டிவ் ஆன டே தான். ஆக்டிவ் ஆன டே மட்டுமல்ல மனசுக்கு ரொம்ப நிறைவான நாள்.

    இந்த திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதை விட மனநிறைவு என்ன இருக்க முடியும். அடுத்து இது மகிழ்ச்சிக்கு உரிய நாளும் கூட. ஏனென்றால் மதிப்புமிகு பஞ்சாப் முதல்-மந்திரி எனது நண்பர் பகவந்த் மான் இங்கு வந்துள்ளார். அவரை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன்.

    இதற்கு முன்பு இப்போது நாடே திரும்பி பார்க்கிற புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைக்க டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார்.

    இப்போது இந்த திட்டத்துக்கு பகவந்த்மான் வந்திருக்கிறார். தனது பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வருகை தந்திருக்க கூடிய பஞ்சாப் முதல்-மந்திரிக்கு மனமார்ந்த நன்றி.

    பசியும் பிணியும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லப்பட்டு உள்ளது. வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    கல்வி அறிவை வழங்கும் இடமாக மட்டும் பள்ளிகள் இருக்கக் கூடாது. வயிற்றுப் பசியையும் போக்கணும். நீதிக்கட்சி காலத்தில் நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது, அப்போது சென்னை மாநகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெருந்தலை வர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. தொடர்ச்சியாக காலை உணவு திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கினோம்.

    இந்த திட்டத்தை தொடங்க காரணம் என்ன என்றால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாளில் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளிக்கு போனபோது, அங்கிருந்த மாணவிகளிடம் காலையிலே என்ன சாப்பிட்டீர்கள் என்று சாதாரணமாக கேட்டேன்.

    ஆனால் நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். சில மாணவிகள் டீ மட்டும் குடித்து விட்டு வந்துட்டேன். 'பன்' சாப்பிட்டேன் இந்த மாதிரி சொன்னாங்க. இதை மனதில் வைத்துதான் காலை உணவு திட்டம் தேவை என்பதை அரசின் கொள்கையாக அறிவித்தேன்.

    2022-ம் ஆண்டு செப் டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். முதல் கட்டமாக 1,545 பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்தார்கள்.

    பிறகு 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த திருக்கு வளையில் எல்லா அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்தோம். 2024-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தார்கள்.

    இந்த திட்டத்தோட அட்டகாசமான சக்சஸ் பற்றி கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டை பார்த்து இனி நகர் பகுதிகளில் செயல்படுகிற 2,429 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம்.

    இதனால் கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற போகிறார்கள். இனி தமிழ்நாட்டில் செயல்படுகிற 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கக் கூடிய 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினமும் காலையில் சூடாக சுவையாக, சத்தாக சாப்பிட்டு பள்ளி வகுப்பறையில் தெம்பாக நுழையப் போகிறார்கள்.

    ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதை செலவு என்று சொல்ல மாட்டேன். இது ஒரு சூப்பரான சோசியல் இன்வெஸ்ட்மெண்ட் (முதலீடு) இது.

    எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ் சமுதாயத்துக்கு தரப் போகிற முதலீடு இது.

    என் தமிழ்நாட்டு மாணவ செல்வங்களை நம்பி அவர்களின் திறமை மீது, அறிவு மீது, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்கிறோம்.

    நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தோட உண்மையான வெற்றி.

    இன்னும் கொஞ்சம் இறுமாப்போடு சொல்ல வேண்டும் என்றால், இனிமேல், பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள், பசி காரணமாக வாடிய முகத்துடனும், சோர்வுடனும் இருக்க மாட்டார்கள். புன்னகையும், நம்பிக்கையும், ஆர்வமும், சுறுசுறுப்பும் நிரம்பிய முகங்களைத்தான் இனி பார்க்கப் போகிறோம்.

    காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, நான் இதை க்ளோசா…மானிட்டர் செய்து கொண்டு வருகி றேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை, பிள்ளைகள் வயிறு நிறைகிறது என்று மட்டும் இந்தத் திட்டத்தை சிம்ப்பிளாக பார்க்க முடியாது. இதனால்,

    * உணவுண்ணும் பழக்க வழக்கங்களில் இம்ப்ரூவ் மெண்ட் வந்திருக்கிறது.

    * பாசிட்டிவான பழக்க வழக்கங்களை வளர்ப்பதில் பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    * மற்ற குழந்தைகளுடன் ஈசியா, ஜாலியா பழகுகிறார்கள்.

    * குழந்தைகளின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.

    * ஸ்கூலுக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.

    * கிளாஸ் ரூமில் கவனம் மற்றும் ஈடுபாடு அதிகமாகி இருக்கிறது.

    * வகுப்பில் தோழமை உணர்வு மேம்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.

    எதிர்பாராத பல நன்மைகளையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவை பள்ளிகளே வழங்குவதால், ஒரு குடும்பத்தில் அம்மா – அப்பா இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய பணிச்சுமை குறைந்திருப்பதுடன், குழந்தைகள் ஸ்கூலில் வயிறார சாப்பிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையையும், நிம்மதியையும் தருகிறது.

    அவ்வளவு ஏன்… டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை, அரசுப் பள்ளிகளில், குழந்தைகளிடையே ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது. ஹாஸ்பிடலுக்குச் செல்வதும் குறைந்திருக்கிறது. இன்னும் சொல்கிறேன். காலை உணவுத் திட்டத்தால், அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது.

    கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று வாய்ப்புகள் அதுவும் குறைந்திருக்கிறது. இப்படி, நிறைய பாசிட்டிவாக இருப்பது ஆய்வு மூலமாக நமக்கு தெரிய வந்திருக்கிறது.

    ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படித்தான், காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும், பிற நாடுகளுமே கூட தொடங்கவும், செயல்படுத்தவும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    கனடா போன்ற வளர்ந்த மேலை நாடுகளிலும், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இதை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் என்பது நமக்கெல்லாம் இருக்கின்ற பெருமை! இந்த நேரத்தில் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கின்ற மற்றொரு முக்கியமான திட்டத்தையும் சொல்ல விரும்புகிறேன்…

    அது, "ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்! இந்த திட்டத்தால் என்ன பயன் என்றால், இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் பகுதியில், ஆறு மாதம் வரையிலான 14 ஆயிரத்து 901 குழந்தைகளில், 13 ஆயிரத்து 262 குழந்தைகளையும், இரண்டாம் பகுதியில், ஆறு மாதத்தில் இருந்து ஆறு வயது வரையிலான 92 ஆயிரத்து 15 குழந்தைகளில், 61 ஆயிரத்து 651 குழந்தைகளையும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம்.

    அதேபோல, இரண்டாம் கட்டத்தில், ஆறு மாதம் வரையிலான 76 ஆயிரத்து 705 குழந்தைகளில், 67 ஆயிரத்து 913 குழந்தைகளை சத்துள்ள குழந்தைகளாக வளர்த்தெடுத்திருக்கிறோம்.

    இந்தத் திட்டங்கள் மட்டும் கிடையாது, நம்முடைய அரசின் முத்திரை திட்டங்களில் முக்கியமான சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறுகின்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சம் பேர்!

    பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!

    அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேருகின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன்!

    வேலைக்குச் செல்கின்ற மகளிருக்கு தோழி விடுதிகள்!

    மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று, நேரில் ரேஷன் தருகின்ற தாயுமானவர் திட்டம்!

    ஏழை, எளிய நடுத்தர மக்கள் இருக்கின்ற இடத்திற்கே சென்று பயனளிக்கின்ற உங்களுடன் ஸ்டாலின்! நலம் காக்கும் ஸ்டாலின்!

    இது எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக, நாட்டிலேயே பொருளாதாரத்தில் டபுள் டிஜிட் வளர்ச்சி அடைந்திருக்கின்ற மாநிலம் என்றால், அது நம்முடைய தமிழ்நாடு தான்!

    நான் சி.எம். ஆன நாளில் இருந்து எனக்கு இருந்த, இருக்கின்ற ஒரே குறிக்கோள், "தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும்!" இந்த நேரத்தில் நான் பெரிதாக நன்றி சொல்லிக் கொள்ள விரும்புவது… இந்த குழந்தைகளுக்கு சமைக்கின்ற தாய்மார்களுக்குதான்! உங்கள் வீட்டில், உங்கள் குழந்தைகளுக்கு சமைக்கின்றது போல, நன்றாக சமைக்கிறீர்கள்! மகளிர் சுயஉதவிக் குழு சகோதரிகளுக்கு நான் மனமார்ந்த நன்றியை சொல்கிறேன். உங்கள் பணியும் சிறப்பாக தொடரவேண்டும்!

    மாணவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்… நன்றாக சாப்பிடுங்கள்… நன்றாக படியுங்கள்… நன்றாக விளையாடுங்கள்… உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்!

    முதலமைச்சரான உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், நம்முடைய திராவிட மாடல் அரசும், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் உங்களுக்காக செய்து தருவோம்! எங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே! எப்போதும் உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்! இருப்போம்! குழந்தைகளுக்கு ஆல் த பெஸ்ட்!நன்றி! வணக்கம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×