என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு..!
    X

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு..!

    • அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு .
    • பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புற மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தாம்பரம்– மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

    பிறகு, விழா முடிவுற்று இல்லம் செல்லும் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் உள்ள அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சதை பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் உயர்தர மத்திய ஆய்வகத்தையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, மருத்துவமனை இயக்குநர், சிகிச்சை பெற்று வரும் 121 புற மருத்துவ பயனாளிகள் (out patients), 326 உள் மருத்துவ பயனாளிகளுக்கு (In patients), மத்திய ஆய்வகத்தில் இன்றைய தினம் இதுவரை 2390 பல்வேறு வகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, அம்மருத்துவமனையில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பயனாளியிடம் அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் குறித்து, முதலமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை நல்ல முறையில் அளிப்பதாகவும், நன்றாக கவனித்துகொள்வதாகவும் முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.

    பின்னர், பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புற மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு போன்றவற்றை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    அத்துடன், மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும், இம்மருத்துவமனையில் மருத்துவ பயனாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×