என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்தங்கள் இடம் மாறுகிறது
    X

    சென்னையில் பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்தங்கள் இடம் மாறுகிறது

    • சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,347 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் 106 புதிய வழித்தடங்களை கண்டறிந்து அதில் 409 மாநகர பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 74 வழித்தடங்களில் 123 பஸ்களுடன் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் தினமும் 32 லட்சம் பயணிகள் மாநகர பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 4,400 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.

    அதன் பிறகு சென்னை நகரம் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளது. சென்னையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. பல சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் சில பஸ் நிறுத்தங்களில் சாலைகள் குறுகலாக மாறி விட்டன. இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் ஒருபுறம் அல்லது இருபுறமும் தோண்டப்பட்டு பணிகள் நடப்பதால் அந்த இடங்களிலும் சாலைகள் சுருங்கி விட்டன.

    சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதும், பஸ்சுக்காக காத்திருப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற இடங்களில் இருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்த இடமில்லாமல் டிரைவர்கள் சற்று தூரம் தள்ளி சென்று நிறுத்துகிறார்கள். இதனால் பயணிகள் பஸ்சை பிடிக்க ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும் பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் பயணிகளுக்கு பஸ் ஏறுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    இதையடுத்து சென்னையில் நெரிசலான பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களை 50 முதல் 100 மீட்டர் தூரம் வரை மாற்றுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயணிகள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தத்தை மாற்ற வேண்டும் என்பதை அறிய தனியார் நிறுவனம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் பயணிகள் கூறும் கருத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பல இடங்களிலும் பஸ் நிறுத்தங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×