என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    4-வது நாளாக கடல் சீற்றம்: கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து
    X

    4-வது நாளாக கடல் சீற்றம்: கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து

    • வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல் பகுதிகளும் பயங்கர சீற்றமாக இருந்தது.
    • கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று 4-வது நாளாக அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும், பயங்கர சீற்றத்துடனும் காணப்படுகிறது.

    இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல் பகுதிகளும் பயங்கர சீற்றமாக இருந்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

    கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர். சூறாவளி காற்றுடன் கூடிய பயங்கர கடல் சீற்றம் காரணமாக இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று படகு போக்குவரத்து இயக்க வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு கடல் சார் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் இன்று அதிகாலையில் பல மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் ஆகியவற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இதேபோல சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×