என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரத்தத்தை உறிஞ்சும் முடிவு.. நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல் - காங்கிரஸ் எதிர்ப்பு
    X

    ரத்தத்தை உறிஞ்சும் முடிவு.. நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல் - காங்கிரஸ் எதிர்ப்பு

    • தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமை பறிக்கப்படுகிறது.
    • தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை இது.

    2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன.

    இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. இவை முற்போக்கான சீர்திருத்தங்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது,நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. புதிய சட்டம் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு. புதிய தொழிலாளர் சட்டம் விக்சித் பாரதம் 2047 என்ற இலக்கை அடைய புதிய உத்வேகத்தை வழங்கும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம், பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் மரியாதையை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை உத்தரவாதம் அளிக்கும்" என்று தெரிவித்தார்.

    அதேநேரம், புதிய சட்டத்தின் மூலம் வணிகங்கள் இப்போது பீடி, சுருட்டு சுற்றுவது உள்ளிட்ட தொழிலாளர்களை 12 மணி நேர ஷிப்டுகளுக்கு வேலைக்கு அமர்த்தலாம்.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நாடு முழுவதும் கட்டாயமாக அமலாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனையும் மனிதநேய உரிமைகளையும் நேரடியாக புறக்கணிக்கும் முடிவாகும். உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இந்தச் சட்டங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    8 மணி நேர வேலை நேரம் என்பது ஒரு சாதாரண விதிமுறை அல்ல; தலைமுறைகள் கடந்து நடந்த ரத்தத்தும் உயிர்தியாகங்களும் கொண்ட போராட்டங்களின் பயனாக உருவான வரலாற்றுச் சாதனை. தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமையாக இதை உறுதி செய்தவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். 'தொழிலாளர் ஒரு மனிதன்; இயந்திரம் அல்ல' என்ற அவரின் உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேரம் என்பது சட்டமாக கொண்டுவரப்பட்டது.

    அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு. மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும்.

    இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல; நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன. உழைப்பால் தேசத்தை வளர்க்கும் மக்களின் சுவாசத்தையும், துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது.

    இந்த நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

    உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின் செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு. இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கப்படும் வரை நாம் ஒருபோதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்." என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×