என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. 54-வது ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி பழனிசாமி 17-ந்தேதி கொடி ஏற்றுகிறார்
- அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட 'அ.தி.மு.க' வருகிற 17-ந்தேதி அன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
- கழகத்தின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட ''அ.தி.மு.க.'' வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில், பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக்கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும், நம் இருபெரும் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






