என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இளம்பெண்ணை ஓடஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்- வீடியோ
- காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
- சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முத்தையாபுரம் அருகே உள்ள சுந்தர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் நிஷாந்த். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் கந்தசாமி (வயது91) என்பவர் நிஷாந்தின் வீட்டு காம்பவுண்டை ஒட்டி வாழை மரத்தை வளர்த்து வந்துள்ளார். வாழை மரத்தின் காய்ந்த இலைகள் நிஷாந்தின் வீட்டிற்குள் விழுந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே வாழை மரத்தின் காய்ந்த கிளைகளை அகற்றுமாறு நிஷாந்த் கூறியுள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் நிஷாந்தின் மனைவி சிந்துஜா (வயது 30) வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு வந்த கந்தசாமி வாழை மரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய்? என்று சொல்லி திடீரென்று சிந்துஜாவின் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் அலறியவாறு தெருவில் ஓடினார். ஆனாலும், ஆத்திரம் தீராத முதியவர் அரிவாளுடன் அவரை துரத்தி சென்று வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிந்துஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த முதியவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
இதில் காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






