என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 7 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்- 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்
- பெற்றோர் கோவை சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவாதித்யா, இன்று மூளைச்சாவு அடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதிக்கு சிவாதித்யா(7), நிலன் ஆதித்யா என 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிவாதித்யா தனது தாத்தாவுடன் காரில் சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் தாத்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறுவன் சிவாதித்யா பலத்த காயம் அடைந்தார். அவரை அவரது பெற்றோர் கோவை சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவாதித்யா, இன்று மூளைச்சாவு அடைந்தார்.
இதுகுறித்து அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு உறுப்பு தான ஆணைய அனுமதியுடன், சிறுவனின் கண்ணை தவிர மற்ற 6 உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தானமாக பெறப்பட்டன. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 7 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.






