என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இளைஞர் ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயம்... மூளையில் ரத்தக்கசிவு - அம்பலமான அதிகாரத்தின் அத்துமீறல்
    X

    இளைஞர் ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயம்... மூளையில் ரத்தக்கசிவு - அம்பலமான அதிகாரத்தின் அத்துமீறல்

    • இரும்புக் கம்பியால் காலை அடித்து உடைத்த காவல்துறை
    • இளைஞர் ஆகாஷ்மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கின் வடுவே இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்த ரணங்களை தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கு கொடுத்துவருகிறது.

    கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 37 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை வழக்குகளில் ஒருசிலவையே மக்களுக்கு வெளிச்சமாகி பெரிதாக வெடித்தவை.

    அந்தவகையில் அஜித்குமார் மரணவழக்கை தொடர்ந்து தற்போது அரங்கேறிய கொடூரம்தான் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருவரை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைதின்போது தப்ப முயற்சித்து பாலத்திலிருந்து விழுந்து ஆகாஷின் கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தாக தெரிவித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்காக மாற்றப்பட்டதாகவும் கூறினார்.

    ஆனால் அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்படுமா என்னும் கேள்வி சிறுகுழந்தைக்குக் கூட எழும். ஆனால் காவல்துறை மரணத்திற்கு காரணமாக இதைக்கூறியது.

    ஆனால் தனது மகன் காவல்துறையினராலேயே அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வர தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதனைத்தொடர்ந்து வெளிவந்த ஆகாஷின் ரிமாண்ட் ரிப்போர்ட் வாக்குமூலங்களும் அவரது மரணத்திற்கு காவல்துறையே காரணம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. போலீசாரே தனது காலை உடைத்ததாகவும், அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே அவரது உடலை உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் அவரது உடற்கூராய்வு முடிவுகள் வெளிவந்து காவல்துறையே இந்த மரணத்திற்கும் காரணம் என ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதன்படி ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், வலதுகாலின் நடுப்பகுதியில் எலும்புகள் முறிந்திருந்தாகவும், மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆகாஷ் போலீசார் தாக்குதலிலேயே உயிரிழந்தார் என்பது தெளிவாகியுள்ளது.

    Next Story
    ×