search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத நிலையை அடைவோம்: மு.க.ஸ்டாலின் உறுதி
    X

    2030-ம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத நிலையை அடைவோம்: மு.க.ஸ்டாலின் உறுதி

    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருள் 'சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்' என்பதாகும்.

    எய்ட்ஸ் பாதிப்புள்ள பெற்றோரிடம் இருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட, அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், புதிய எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    13.78 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு 2003-ல் இருந்த எய்ட்ஸ் பாதிப்பு 0.83 சதவீதத்தில் இருந்து 0.17 சதவீதமாக குறைந்துள்ளது. இது தேசிய சராசரியான 0.22 சதவீதத்தை விட குறைவானதாகும்.

    மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் பால்வினை தொற்று சிகிச்சை மையங்கள், நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் போன்ற பல திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறக்கட்டளை 2009-10-ம் ஆண்டில் தொடங்கியது.

    இதுவரை 25 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிடம் இருந்து நிதியாக பெறப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, இத்தொற்றினை 2030-ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய இன்றே லட்சியமாக ஏற்று பயணிப்போம்.

    எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, மனிதநேயத்துடன் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×