search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை- சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார்
    X

    இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை- சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார்

    • 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
    • ஜெயா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஜெயா (வயது 25). என்ஜினீயரிங் படித்துள்ள இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணத்தை சேர்ந்த கண்ணனின் மகன் விஜயகுமாருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 2 வயதில் நிகிதா, நிகிசா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். என்ஜினீயரான விஜயகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி அழைத்ததன்பேரில் ஜெயா குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு வந்தார்.

    அங்கு முதல் தளத்தில் உள்ள அறையில் ஜெயா குழந்தைகளுடன் தங்கியிருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் ஜெயா தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வி காலை 9 மணியளவில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது அறையின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் ஜெயா தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அருகே 2 பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தமங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தகவல் அறிந்த ஜெயாவின் பெற்றோர், சகோதரர், உறவினர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்து ஜெயா மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இதையடுத்து ஜெயா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தங்களது மகள், பேத்திகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் விஜயகுமாரின் அண்ணன் வினோத்குமாரின் மனைவி பிரியா ஆகியோர் ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மேலும் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் ஜெயாவின் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தைகளை கொன்று ஜெயா தற்கொலை செய்திருந்தால், அதற்கான காரணம் என்ன?, அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா?, அல்லது அவரும், குழந்தைகளும் கொலை செய்யப்பட்டனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×