search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜார்ஜியாவில் டாக்டருக்கு படித்து வரும் செங்கல்பட்டு மாணவர் கதி என்ன? தலைமை செயலகத்தில் தாய் கண்ணீர் புகார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஜார்ஜியாவில் டாக்டருக்கு படித்து வரும் செங்கல்பட்டு மாணவர் கதி என்ன? தலைமை செயலகத்தில் தாய் கண்ணீர் புகார்

    • தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு வந்தார்.

    சென்னை:

    செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதிக்கு சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திக் வழக்கம் போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாணவன் ரித்திக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்திக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.

    இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர்.

    இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்திக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×