search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாடகை வீடு தேடுவது போல் நடித்து கொள்ளையடித்தோம்- கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
    X

    வாடகை வீடு தேடுவது போல் நடித்து கொள்ளையடித்தோம்- கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

    • வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    • கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள செங்குட்டை வீதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 60). பால் வியாபாரி. கடந்த 24-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைத்து வைத்துவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து சதாசிவம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம், உதவி கமிஷனர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு பெண் சதாசிவம் வீட்டிற்குள் சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் வெங்கமேட்டை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மனைவி ரமணி (33) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரது கூட்டாளியான வினையா (33) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட ரமணியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை காப்பாற்றுவதற்காக நான் முதலில் திருட ஆரம்பித்தேன். நான் ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் இருந்தேன். அப்போது எனக்கு போக்சோ வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த வினையாவுடன் நட்பு ஏற்பட்டது. அவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரை ஜாமீனில் வெளியே எடுத்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தோம்.

    நாங்கள் வீடு வாடகைக்கு கேட்க செல்வது போலவும், வேலை கேட்டு செல்வது போலவும், உறவினர் வீட்டை தேடி வந்தது போலவும் செல்வோம். அப்போது அங்கு திறந்து இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவோம். கொள்ளையில் ஈடுபடும் போது யாராவது வந்து விட்டால் அதற்கு ஏற்ப நாடகமாடி அங்கு இருந்து தப்பிச் சென்று விடுவோம். நாங்கள் பெண்கள் என்பதால் எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

    நாங்கள் 2 பேரும் வீடு வாடகைக்கு கேட்டு செல்வது போல மசக்காளிபாளையம் பகுதியில் நோட்டமிட்டோம். அப்போது சதாசிவம் என்பவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைத்து வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்டோம். எனவே அவரது வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டோம். சம்பவத்தன்று நாங்கள் கால் டாக்சியில் மசக்காளி பாளையம் செங்குட்டை வீதிக்கு சென்றோம். வினையா காரில் அமர்ந்து இருந்தார். நான் காரில் இருந்து இறங்கி சென்று சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றோம்.

    போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    கைது செய்யப்பட்ட ரமணி மீது கரூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அவர் கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் கொள்ளையடித்த நகைகளை அவரது சித்தி ஜெயந்தி என்பவரிடம் கொடுத்து பணமாக மாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. ஜெயந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ரமணி, வினையா ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×