search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- அண்ணாமலை
    X

    டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது- அண்ணாமலை

    • தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும்.
    • கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாரதியாரின் கனவு இப்போது நனவாகி உள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்து உள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை.

    உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்து வந்த நிலையில், தனித்துவமான நாடாக இந்தியா தற்போது உருவாகி உள்ளது.

    இஸ்ரோ விண்வெளி நிறுவனத்துக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது. நாகப்பட்டினம் வரவேண்டிய விண்கல ஏவுதளம், தி.மு.க. அமைச்சர் முயற்சி செய்யாததால் ஹரிகோட்டாவிற்கு சென்றது.

    2-வது விண்கல ஏவுதளத்தை குலசேகர பட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை தி.மு.க. அரசிற்கு உள்ளது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வின் நடைபயணம் குறித்து பொன்முடி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஏ.சி. அறையில் இருந்து அரசியல் செய்கிறார்கள்.

    23 நாளில் 128 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம். 234 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் முதல் கட்சியாக பா.ஜ.க தான் இருக்கும்.

    தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

    பா.ஜ.க. நடை பயணத்தால் அரசியல் புரட்சி ஏற்பட்டு உள்ளது. எனக்கு நடைபயணத்தின் போது பகவத் கீதையை விட 21 பைபிள், 7 குர்ஆன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. அவை தற்போது என் பூஜை அறையில் உள்ளது.

    பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்? பா.ஜ.க. மீதான பிம்பம் உடைந்து தற்போது அனைவருக்காகவும் உழைக்கும் கட்சியாக உள்ளது.நடைபயணத்தின்போது இஸ்லாமியர், கிறிஸ்துவர்களும் என்னுடன் நடந்து வந்தனர்.

    நீட் மசோதாவில் கவர்னரின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.

    ஆளுநர் தி.மு.க.வின் சவாலை ஏற்று, சொந்த மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என தி.மு.க.வினர் எல்லாவற்றையும் பேசக்கூடாது.

    கவர்னரை சம்மந்தம் இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது.

    கவர்னருக்கும், அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து பதில் சொல்ல தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?.

    காவிரி பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அதனை இவர் தற்போது இடியாப்ப சிக்கலாக்கி ரசித்து வருகிறார்.

    அனைவருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது தி.மு.க.வின் முதல் கடமையாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம்.

    அ.தி.மு.க மாநாடு அந்த கட்சிக்கு முக்கியமானது.மாநாடு என்றால் ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×