search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீசாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ரவுடி: கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவர்
    X

    காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் முத்தையான், போலீஸ்காரர் ராஜேஷ்குமார், ரவுடி அலெக்ஸ்.

    போலீசாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த ரவுடி: கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவர்

    • காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நீலியாம்பட்டி செல்லும் சாலையில் சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

    போலீசார் நெருங்கி வருவதை கண்ட அந்த நபர் யாரும் பக்கத்தில் வராதீர்கள். வந்தால் சுட்டு விடுவேன் என்று மிரட்டினார். மேலும் கையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார். இருப்பினும் அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

    உடனே அந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து போலீஸ் மீது வீசினார். அது தொட்டியம் காவல் நிலைய போலீஸ்காரர் ராஜேஷ் குமார் மீது விழுந்து அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர் பார்த்தபோது அது வெடிகுண்டு அல்ல பெரிய பாறாங்கல் என்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியை காட்டி சுட முயற்சி செய்தார். உடனே சுதாகரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் முத்தையன் தற்காப்பிற்காக தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்கு கீழாக குறி பார்த்து சுட்டார்.

    இதில் அவரது கால் மூட்டில் 2 குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் என்பது தெரியவந்தது. பின்னர் காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்பு டன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிடிபட்ட ரவுடி அலெக்ஸ் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கடைசியாக மணிகண்டத்தில் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்தார்.

    இந்த வழக்கில் அலெக்ஸை மணிகண்டம் போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் தொட்டியத்தில் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த அலெக்சை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.அவர் மீதான வழக்குகள் தற்போது தூசு தட்டப்பட்டு வருகிறது. ரவுடி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சமீப காலமாக காவல்துறையினர் ரவுடிகளை அவர்களின் முட்டிக்கு கீழ் சுட்டு பிடிப்பது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×