search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உயர் அதிகாரி அவதூறாக பேசியதால் டிரைவர் தற்கொலை முயற்சி- நள்ளிரவில் ஊழியர்கள் போராட்டத்தால் பரபரப்பு
    X

    நள்ளிரவில் பெருந்துறை பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்களை படத்தில் காணலாம்.

    உயர் அதிகாரி அவதூறாக பேசியதால் டிரைவர் தற்கொலை முயற்சி- நள்ளிரவில் ஊழியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

    • ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
    • ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுள்ளி பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவர் கடந்த 20 வருடங்களாக பெருந்துறை அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நடராஜன் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் மண்டல மேலாளரை சந்திக்க சென்றார். அப்போது பணி சம்பந்தமாக வணிக மேலாளர் நடராஜனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர் பெருந்துறை போக்குவரத்து கழக கிளை அலுவலகம் வந்தார். இதையடுத்து அவர் அங்கு சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைப் பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை கிளை அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் சுமார் 80 பேர் நள்ளிரவில் பணிமனை நுழைவு வாயில் பகுதியில் திரண்டர். இதை தொடர்ந்து அவர்கள் சக ஊழியரை அவமானப்படுத்தி அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் மருத்துவ செலவை அவரே ஏற்க வேண்டும். இல்லை என்றால் இன்று அதிகாலை முதல் பெருந்துறை கிளை பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று கூறி அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சை பெற்று வரும் டிரைவரின் மருத்துவச் செலவினை போக்குவரத்து கழகமே கவனித்து கொள்ளும் என்றும் கூறினர். இதை யடுத்து அவர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டு போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

    Next Story
    ×