search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி உலக்கையால் அடித்துக்கொலை
    X

    நெல்லை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி உலக்கையால் அடித்துக்கொலை

    • கடந்த சில ஆண்டுகளாக 2 தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து செங்கையாவை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி வள்ளித்தாய் (வயது 63). இவர்களது மகன் தமிழ்செல்வம்.

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை இறந்துவிட்டார். இதனால் வள்ளித்தாய் மட்டும் கூவாச்சிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வடக்கு தெருவில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வள்ளித்தாய் வீட்டில் மர்மமான இறந்து கிடப்பதாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவர் இறப்பதற்கு முன்பாக வரை அக்கம் பக்கத்தினரிடம் நன்றாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவரது உடலை பார்த்தபோது தலை உள்ளிட்ட சில இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    விசாரணையில், வள்ளித்தாய் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளியான செங்கையா(வயது 60) என்பவர் அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    கடந்த சில ஆண்டுகளாக 2 தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. அவர்களது வீட்டிற்கு இடையே உள்ள காலியிடம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் செங்கையா ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் வள்ளித்தாய் வீட்டுக்கு சென்ற செங்கையா, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாதம் முற்றியதில், அங்கு கிடந்த உலக்கையால் வள்ளித்தாயை செங்கையா தாக்கி உள்ளார். இதில் அவர் சரிந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். உடனே ஒன்றும் தெரியாதது போல் செங்கையா தனது வீட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து செங்கையாவை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×