search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம்- தமிழக அரசு கோரிக்கையை தென்னக ரெயில்வே ஏற்றது
    X

    கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம்- தமிழக அரசு கோரிக்கையை தென்னக ரெயில்வே ஏற்றது

    • புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரெயில்வே துறைக்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
    • சென்னை கோட்ட ரெயில்வே துறை சார்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கான சர்வே மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளது.

    சென்னை:

    வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் முனையம் கட்டப்பட்டு உள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பஸ் முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூரில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்திலும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    புறநகர் பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் முனையம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஸ் பயணிகளுக்கு வசதியாக ஊரப்பாக்கத்துக்கும் வண்டலூருக்கும் இடையே கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று புதிய ரெயில் நிலையம் அமைக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது. தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறார்.

    புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரெயில்வே துறைக்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை கோட்ட ரெயில்வே துறை சார்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கான சர்வே மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் வேலைக்கான டெண்டர் விடப்படும். டெண்டர் விடப்பட்ட ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய ரெயில் நிலையம் கட்டுவதற்கு ரூ.20 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.4 கோடி நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.

    புதிய ரெயில் நிலையத்துக்கான நிலங்கள் ரெயில் பாதையின் இருபுறமும் கிடக்கின்றன. இது தவிர தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. ரெயில் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது.

    வருவாய் துறை சார்பில் ஒப்புதல் அளிக்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த புதிய ரெயில் நிலையம் பஸ் நிலையத்துக்கு இணைப்பாக அமைவது வடசென்னை மற்றும் தென் சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    Next Story
    ×