search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேது சமுத்திரத் திட்டம்- சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    சேது சமுத்திரத் திட்டம்- சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

    • முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்துக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்ற தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    150 ஆண்டுகாலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டு மென்ற தீர்மானத்தை இம்மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன்.

    பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர்தான் சேதுசமுத்திரத் திட்டம்.

    இந்தியாவினுடைய முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையில் 1963ம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்ற திட்டம் இது. 1967ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா, 'தம்பிக்கு' எழுதிய மடலில் இத்திட்டதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும். இங்கேயுள்ள மீனவர்களின் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட நாடாக மாறும்.' என்று பேரறிஞர் அண்ணா எழுதினார். இத்திட்டத்தை நிறைவேற்றித் தருவதற்கு எழுச்சி நாள் கொண்டாடுவது என்றும் அறிவித்தார்கள்.

    1972-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, அன்றைய முதலமைச்சர் கலைஞர் இதனை வலியுறுத்தினார்.

    தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்திப் பேசினார்.

    1998-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியினை ஒதுக்கினார். பா.ஜ.க. ஆட்சியில்தான் சேது சமுத்திரத் திட்டத்துக்கான பாதை எது எனத் தீர்மானிக்கப்பட்டது.

    2004-ம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க.வை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்த பிறகு 2,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. சார்பில் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது என்பதும், இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இத்திட்டத்துக்கு எதிராக வழக்குப் போட்டார் என்பதையும் இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

    இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும்.

    முத்தமிழறிஞர் கலைஞர் சுட்டிக் காட்டியதைப் போல, நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும், தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும், கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்.

    சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம். வாழ்க்கைத் தரம் உயரும்.

    மீனவர்களுடைய பாதுகாப்பைக் கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தினுடைய காரியங்கள் நடைபெறுகின்றன. மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதி அளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும்.

    நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தினால் மிக முக்கியமாக, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். இவை எல்லாம் தான் அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் சுட்டிக்காட்டியவை.

    இவை அனைத்தும் நடந்திருக்கும். நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.

    தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு சொல்லி இருக்கிறது.

    ஆனால் 'ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்" என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப் பாட்டுக்கு பா.ஜ.க. அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும்.

    பேரவைத் தலைவரே சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தீர்மானத்தை நான் இப்பொழுது முன்மொழிகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவர் முன்மொழிந்த அந்த தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.

    1860-ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்தி ரசிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டுகாலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும்.

    இதன்வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச் சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதன் செயலாக்க ஆய்வுக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது தான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.

    தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் மூலம் 2004-ம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இத்திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 2.7.2005 அன்று தொடங்கி வைத்தார்.

    திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலை நிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களை செழிக்க வைக்கும் இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

    எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும் வகையில் தற்போது 'ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்' என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

    இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு-வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.

    இனியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது.

    இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைவரையும் கேட்டு அமைகிறேன்.

    இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தின் மீது சட்டசபையில் உள்ள அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் வரவேற்று பேசினார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓ.பன்னீர் செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.), செல்வ பெருந்தகை (காங்கிரஸ்) நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள்) ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) உள்ளிட்ட அனைவரும் இந்த தீர்மானத்தை வரவேற்று பேசினார்கள்.

    சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

    நயினார் நாகேந்திரன் பேசும்போது, 'ராமர் பாலத்துக்கு சேதாரம் இன்றி சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுமானால் வரவேற்கிறோம். இந்த தீர்மானத்தையும் ஆதரிக்கிறோம்' என்றார்.

    இதைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியது.

    Next Story
    ×