search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு: தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
    X

    10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு: தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பது என்று கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    "முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளிடம் சாதிப்பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.

    இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூக நீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப்போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்.

    சமூகநீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்."

    மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கூட்டத்தின் முடிவில், தலைமைச் செயலாளர் இறையன்பு நன்றி கூறினார்.

    அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-

    ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டும் ஆதரவாக தீர்ப்பு அளித்திருப்பதை எப்படி நாம் சந்திக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் இருக்கின்ற கட்சிகளை அழைத்து கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.

    இந்த கூட்டத்தில் 10 கட்சிகள் கலந்து கொண்டிருக்கின்றன. எல்லா கட்சிகளுமே ஒத்த கருத்துக்களைதான் இந்த சமூக நீதிக்கு எதிர்ப்பான பொருளாதார அடிப்படை என்று சொல்லிக் கொண்டு இருக்கிற 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பாக நாம் முழுமையாக நீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்ற அடிப்படையிலான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு கட்சியும் சீராய்வு மனு போட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு 10 கட்சிகளும் ஒத்துக் கொண்டிருக்கின்றன.

    இந்த சீராய்வு மனு போடுகின்றபோது அதற்கு தேவை ஏற்படுகிறபோது தமிழக அரசும் அதற்கு ஆதரவாக இதில் ஈடுபடும்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை. அவர்கள் கலந்து கொள்ளாதது எங்களுக்கு வருத்தம் அளித்தாலும் கூட அவர்கள் இதை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    தமிழக மக்களில் 90 சதவீதம் பேர் இந்த சமூக நீதி கொள்கையின்கீழ் வருகிறார்கள். பா.ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்படுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×