என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தனியார் பஸ் டிரைவர் சாவில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே மின்சாரம் பாய்ச்சி கொன்றது அம்பலம்
- கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மோகன்ராஜை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
- கணவனை மனைவி மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மோகன்ராஜ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா (30). இவர்களுக்கு ஜனஸ்ரீ (13), கவின் ஸ்ரீ (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 5-ந் தேதி இரவு, மோகன்ராஜ் அவரது வீட்டில் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் அவரது மனைவி, மகன்களும் படுத்து தூங்கினர். இந்த நிலையில் மறுநாள் காலையில் மோகன்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மோகன்ராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில், மோகன்ராஜ் மனைவி கீர்த்தனாவுக்கு, கதிரேசன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கீர்த்தனா மற்றும் கதிரேசனை போலீசார் பிடித்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வரகூர்கோம்பை பகுதியை சேர்ந்த கதிரேசனுடன், கீர்த்தனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதனை அறிந்து மோகன்ராஜ், இருவரையும் கண்டித்தார். இதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மோகன்ராஜை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, சம்பவத்தன்று மோகன்ராஜ் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கதிரேசன், கீர்த்தனாவுடன் சேர்ந்து கொண்டு, மோகன்ராஜ் வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து அதை மோகன்ராஜ் உடலில் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்தனர். பின்பு மோகன்ராஜ் தற்செயலாக இறந்ததாக கூறி கீர்த்தனா நாடகம் ஆடியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மோகன்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து, மர்மச் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கீர்த்தனா மற்றும் கதிரேசனை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த கொடூர சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






