search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை
    X

    இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

    • விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
    • விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, கிருஷ்ணன், தங்கப்பாண்டி, அஜித், மடுகுபிச்சை ஆகிய 6 மீனவர்கள் தூதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மன்னார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், இலங்கை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மன்னார் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்களை விடுதலை செய்து மன்னார் கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.

    விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×