என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி அருகே தந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன் கைது
    X

    ஊட்டி அருகே தந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன் கைது

    • ரகுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
    • விவேக்கை போலீசார் கைது செய்தனர்.

    ஊட்டி:

    ஊட்டி அருகே உள்ள கடநாடு மந்தட்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரகு (வயது 53). விவசாயி.

    இவரது மனைவி சாந்தி. இவருக்கு யஸ்வந்தி என்ற மகளும், விவேக் (25) என்ற மகனும் உள்ளனர். யஸ்வந்தி திருமணம் முடிந்து பெங்களூரில் வசித்து வருகிறார். விவேக் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தங்கும் விடுதியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று சாந்தி பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். இங்கு ரகுவும், விவேக்கும் மட்டும் இருந்தனர். இரவில் ரகுவுக்கும், மகன் விவேக்கிற்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    சமீபத்தில் ரகு, தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்றுள்ளார். அதில் ஒரு தொகையை மகன் விவேக்கிற்கு கொடுத்துள்ளார். அந்த சொத்தை விற்காமல் தனக்கே கொடுத்திருக்கலாமே, ஏன் சொத்தை விற்றாய் என கேட்டு விவேக் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதேபோல தான் நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் மாறி, மாறித் தாக்கிக் கொண்டுள்ளனர்.

    பின்னர் ரகு கட்டிலில் போய் படுத்துக் கொண்டார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத விவேக், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்தார். ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் ரகுவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். ரகு, அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிர் விட்டார்.

    ரகுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரகு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அவர்கள் தேனாடு கம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விவேக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின் இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

    இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×