என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆம்னி பஸ்-லாரி மோதி தீ பிடித்தன: 22 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்
    X

    ஆம்னி பஸ்-லாரி மோதி தீ பிடித்தன: 22 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்

    • லாரி சாலையின் குறுக்கே திரும்பி திருவேற்காடு நோக்கி செல்ல முயன்றது.
    • பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன் பகுதி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

    பூந்தமல்லி:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆம்னி பஸ் ஒன்று 22 பயணிகளுடன் நேற்று இரவு கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

    இன்று (சனிக்கிழமை) காலை பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரவாயலில் இருந்து திருவேற்காடு நோக்கி கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

    அந்த லாரி சாலையின் குறுக்கே திரும்பி திருவேற்காடு நோக்கி செல்ல முயன்றது. அப்போது வேகமாக வந்த கர்நாடகா மாநில ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது.இதில் பஸ்சின் முன் பகுதி கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தது.

    லாரியின் பின்பகுதியும் உடைந்து சேதம் அடைந்தது. இதையடுத்து பஸ் டிரைவர் இறங்கி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆம்னி பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. பிறகு பஸ் முன்பகுதியில் தீப்பிடித்தது.

    இதனை கண்டதும் ஆம்னி பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பஸ்சுக்குள் பயணிகள் இருந்ததால் உதவி கோரி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஆம்னி பஸ்சில் உறங்கி கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர்.

    பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன் பகுதி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இந்த தீயானது அருகில் இருந்த லாரிக்கும் பரவியது. இந்த நிலையில் பஸ்சும், லாரியும் ஒன்று சேர்ந்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தீயை போராடி அணைத்தனர்.

    இதில் ஆம்னி பஸ் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. லாரியின் பின்பகுதியில் இருந்த டயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் நடுவே தீ விபத்தில் சிக்கி எரிந்து கிடந்த இரண்டு வாகனங்களையும் கிரேன் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து காரணமாக இன்று காலை நேரத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வேலைக்கு செல்பவர்களும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

    வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாலும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மதுரவாயலில் இருந்து திருவேற்காடு செல்வதற்காக சாலையின் குறுக்கே திரும்பிய லாரியை கவனிக்காமலும் சிக்னலை மதிக்காமலும் கர்நாடகா மாநில சொகுசு ஆம்னி பஸ் வேகமாக வந்து லாரியின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×