search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    • காவேரி மேலாண்மை வாரியம் தனக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படவும், மேகதாது அணை குறித்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவேரி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துவிட்டு, மாலையில் கல்லணைக்கு வந்து ஆற்றின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    ஆய்விற்குப் பிறகு பேட்டி அளித்த காவேரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், மேகதாது அணை குறித்து 23-06-2022 அன்று நடைபெறவுள்ள காவேரி மேலாண்மை ஆணையக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், இது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று கூறுவதை தவறு என்றும், தமிழ்நாடு அரசிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். இவ்வாறு பேட்டி அளித்த ஆணையத்தின் தலைவர், காவேரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவது தான் தங்கள் கடமை என்றும் கூறி இருக்கிறார். அதாவது, ஒருபுறம் மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறிவிட்டு மறுபுறம் நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவதுதான் எங்கள் கடமை என்று கூறுவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவது தான் காவேரி மேலாண்மை வாரியத்தின் பணி என்று அதற்கான ஆய்வு வரம்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, மேகதாது அணை குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் 177.25 டி.எம்.சி. நீரை மாதாந்திர அட்டவணையின்படி அளிக்கிறதா என்பதைத்தான் காவேரி மேலாண்மை வாரியம் உறுதி செய்ய வேண்டும். அதைவிடுத்து, மேகதாது அணை கட்டப்படுவது குறித்து விவாதிக்கப் போகிறோம் என்று காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் கூறுவது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

    காவேரி மேலாண்மை வாரியம் தனக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படவும், மேகதாது அணை குறித்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×