search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பருவமழையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை: தமிழகத்தில் தயார் நிலையில் 4,967 நிவாரண முகாம்கள்
    X

    பருவமழையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை: தமிழகத்தில் தயார் நிலையில் 4,967 நிவாரண முகாம்கள்

    • பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நாளை முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக்கா எச்சரித்தது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது.

    இன்று (2.11.2023) காலை 8.30 மணி முடிய 33 மாவட்டங்களில் 8.74 மி.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 37.03 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.06 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து மழை அதிகரிக்கும் என்பதால் மீட்பு குழுக்களை ஏற்படுத்தவும், நிவாரண முகாம்களை அமைக்கவும் அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் இன்று ஆய்வு செய்தார்.

    அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத்தணிப்பு பணிகளின் காரணமாக 4399 ஆக இருந்த பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது. வெள்ளத்தணிப்பு பணிகளுக்காக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வள ஆதாரத்துறை ஆகிய துறைகளுக்கு 819.50 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    மாநில, மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.

    பொதுமக்கள், வாட்ஸ்அப் எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.

    424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன்எச்சரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளிபரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்திகள் பரப்பப்படுகின்றன.

    பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் குறித்து நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டு அவர்களது பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.

    TNSMART செயலி மூலமாகவும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

    14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதோடு, 16 மாவட்டங்களில் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.

    அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

    பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ளதோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

    பேரிடர் காலங்களில் தேடல், மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுக்கள் அரக்கோணத்திலும், சென்னையிலும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    பேரிடர் காலங்களில் தேவையான அலுவலர்களை தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையால் தயாரிக்கப்பட்ட தொலைபேசி கையேட்டை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்டார்.

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ராஜாராமன், பேரிடர் மேலாண்மை இயக்குநர், ராமன், ஆகிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×