search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பஸ்கள் இயக்கம்... அமைச்சர் சிவசங்கர் தகவல்
    X

    பொங்கலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பஸ்கள் இயக்கம்... அமைச்சர் சிவசங்கர் தகவல்

    • இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.
    • கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.

    சென்னை:

    அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் மொத்தமாக 20,084 இயக்கப்படுகிறது. இவற்றில் நகரப் பேருந்துகள் மட்டும் 9,620 ஆகும். மாவட்ட தடப் பஸ்கள் 9,103, உதிரி பஸ்கள் 1,361 என மொத்த பஸ்களான 10,464 பஸ்களில் 4,446 பஸ்கள் நேற்று ஒரு நாள் மட்டும் சென்னையில் இருந்து பொங்கலுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஒரு நாளில் அதிகபட்சம் இவ்வளவு பஸ்கள் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

    பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு பண்டிகைக்கு முன் உள்ள மூன்று நாட்களில் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை பயணிகள் பயணிப்பார்கள்.

    இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே நேற்றைய நாளில் (13-ந்தேதி) தங்கள் ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது.

    மொத்தமாக 1,44,778 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இச்சிறப்புப் பஸ்கள் இயக்கத்தை கண்காணித்திட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


    இந்தப் பண்டிகை சிறப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, முதலமைச்சரின் உத்தரவின் பேரில், எனது தலைமையிலும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், காவல்துறை மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் கழகங்கள் சார்பிலும், பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளை கொண்டாடிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    மேலும், கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பார்வையிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் புதியதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தை பார்வையிட்டு, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து அறிவுரை வழங்கினார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×