search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழைக்காலம் முடிந்தவுடன் சாலைகள் சீரமைக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு
    X

    மழைக்காலம் முடிந்தவுடன் சாலைகள் சீரமைக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு

    • மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் மீண்டும் நேற்று மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு கொளத்தூரில் நடந்த பணிகளை இன்று ஆய்வு செய்தார்.

    அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று இரவு முதல் பெய்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. புதிதாக கால்வாய் கட்டாத பகுதியிலும் ஏற்கனவே உள்ள பகுதியிலும் நின்ற மழைநீரை மின்மோட்டார் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. சேரும் சகதியும் கூட அகற்றப்பட்டுள்ளது.

    மேலும் தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடக்கிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் முழுமையாக அகற்றும் பணி முடிந்தவுடன் சென்னை முழுவதும் சாலைகள் சீரமைக்கப்படும். இதற்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். மழை முடிந்தவுடன் சாலைகள் செப்பனிடும் பணி தொடங்கும்.

    கடந்த 10 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளாததால் தான் சென்னையில் மழைநீர் தேங்கியது. அவர்கள் அந்த பணியை செய்திருந்தால் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும். தூர்வாரும் பணியை செய்யாததால்தான் சென்னை பாதித்தது.

    முதல்-அமைச்சர் 1000 கி.மீ தொலைவிற்கு மழை நீர் கால்வாய் பணிகளை செய்ய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தென் சென்னை, மத்திய சென்னை பகுதியில் அறவே தண்ணீர் தேங்கவில்லை.

    வட சென்னையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதுவும் ஓட்டேரி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மழைநீர் தேங்கியது.

    கொளத்தூர் கன்னித்தீவு போல இருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது வேறு நினைவை ஏற்படுத்துகிறது. அவர் போகிற கன்னித்தீவு வேறு. அவர் கட்சியில் தான் இருப்பதை காட்டிக்கொள்ளவே இது போன்று பேசுகிறார்.

    மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.

    நிதி ஒதுக்கி செயல்படுத்தியது யார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் செய்கிறோம்... செய்கிறோம்... என்றார்கள். ஆனால் கடைசி வரை செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×