search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    12,525 கிராமங்களில் நாளை கிராமசபை கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசுகிறார்
    X

    12,525 கிராமங்களில் நாளை கிராமசபை கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசுகிறார்

    • அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
    • கிராமசபை கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்கள் என்பதை 6 ஆக உயர்த்தி அரசாணையிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.

    இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராமசபை கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

    'எல்லாருக்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்' என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணப்படி அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாக கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக 'எல்லார்க்கும் எல்லாம்' என்கிற மைய கருத்தின்படி நடத்தப்பட உள்ளது.

    'எல்லார்க்கும் எல்லாம்' எனும் மைய கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் வினியோகிக்கப்பட உள்ளது.

    தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக திட்டசெயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கிராமசபை கூட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து கிராமசபை குறித்த கருத்துகளை தெரிவிக்கிறார். அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    கிராமசபை கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதில், பொதுவான விவாத பொருட்களாக ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம்,

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×