search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 மாத ஆண் குழந்தையின் வாய்- மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொன்ற கொடூர தந்தை
    X

    தந்தை வருண்

    4 மாத ஆண் குழந்தையின் வாய்- மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொன்ற கொடூர தந்தை

    • வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே காரணை பெரியார் நகரில் வசித்து வருபவர் வருண். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வருணின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்துக்கு முன்பே வருணுடன் நெருங்கி பழகியதால் விஜயலட்சுமி கர்ப்பமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணை அழைத்து பேசி இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அப்போது வருண் இந்த திருமணத்தில் எனது பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அவர்கள் வரமாட்டார்கள். பின்னர் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். வருணின் பெற்றோர் இல்லாமலேயே திருமணம் அரங்கேறி உள்ளது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது பெற்றோருக்கு தெரியாமலேயே வருண் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் மாமனார் வீட்டின் ஆதரவுடனேயே வருண் வசித்து வந்த நிலையில் மாமனார் குடும்பத்தினருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோருடன் சென்று விடலாம் என்று வருண் எண்ணியுள்ளார்.

    வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றுவிட்டது தெரிந்தால் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைத்த வருண் தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராமல் 4 மாத ஆண் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தையை வெளியில் அழைத்துச் சென்ற வருண் வாய், மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

    பின்னர் உடலை சிறிய படுக்கை விரிப்பில் சுற்றி பெரும்பாக்கம் சுடுகாட்டு பகுதிக்கு உடலை தூக்கிச் சென்று புதரில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். இதன் பின்னர் மனைவி விஜயலட்சுமியிடம் சென்று, தமது குழந்தை கூடுவாஞ்சேரியில் எனது தோழி மகாலட்சுமியின் வீட்டில் உள்ளது. எங்கள் வீட்டுக்கு சென்று நாம் காதலிக்கும் விஷயத்தை முதலில் சொல்வோம். குழந்தையை பற்றி எதுவும் கூறிவிடாதே என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியும் இதனை சரி என கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார்.

    இதன் பின்னர் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு தனது பெற்றோரை பார்க்க சென்ற வருண், இவர்தான் எனது காதலி, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வருணின் பெற்றோரும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, வருணிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். நான் உங்கள் வீட்டில் பேசி சமாதானம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வருணோ குழந்தை இருக்கும் இடம் பற்றி முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜய லட்சுமி, தனது கணவரின் தோழியான மகாலட்சுமியின் வீட்டை தேடி கண்டுபிடித்து நேரில் போய் விசாரித்தார்.

    அப்போது மகாலட்சுமி, விஜயலட்சுமியிடம் உங்கள் குழந்தையை 4 மாதங்களுக்கு முன்பே வருண் அழைத்து சென்று விட்டார். 3 நாட்கள் மட்டுமே எனது வீட்டில் குழந்தை இருந்தது என்று கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்தே விஜயலட்சுமி உஷாராகி மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி மற்றும் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வருணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 4 மாத குழந்தையை கொலை செய்து உடலை முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உடல் வீசப்பட்ட இடத்துக்கு வருணை அழைத்துச் சென்ற போலீசார் சம்பவ இடத்தில் இருந்து எலும்புக் கூடுகள் சிலவற்றை மீட்டுள்ளனர். குழந்தையின் உடலை சுற்றி வீசிய சிறிய படுக்கையும் கையில் அணிவிக்கப்பட்டிருந்த சிறிய வளையத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×