search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கொடுத்த பேச்சாளர் பட்டியல் ஏற்கப்படுமா?- தேர்தல் ஆணையம் பரிசீலனை
    X

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கொடுத்த பேச்சாளர் பட்டியல் ஏற்கப்படுமா?- தேர்தல் ஆணையம் பரிசீலனை

    • தே.மு.தி.க. பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.
    • பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்க அனைத்து கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருந்தால் தலா 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலையும், தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருந்தால் தலா 20 பேர் கொண்ட பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் முடியும் தேதிக்குள் இந்த பட்டியலை அளித்திருக்கவேண்டும்.

    அதன்படி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளித்துள்ளன. தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    தே.மு.தி.க. பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.ம.மு.க., புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 4-ந்தேதி மாலை நிலவரப்படி, அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளர்கள் பட்டியலை இன்றுவரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேலும் பல கட்சிகள் அதற்கான பட்டியலை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    நட்சத்திர பேச்சாளர் பட்டியலை பல்வேறு கட்சிகள் வழங்கி உள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல்களில் யாருக்கு அனுமதி அளிப்பது என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டது.

    அந்த 2 பட்டியல்களையும் தங்களது பார்வைக்கு அனுப்பும்படி தேர்தல் ஆணையம் கேட்டது. எனவே அவற்றை அங்கு அனுப்பி வைத்துள்ளோம். அ.தி.மு.க. கட்சி சார்பில் எந்தப் பட்டியலுக்கு அனுமதி தர வேண்டும்? என்ற முடிவை இந்திய தேர்தல் ஆணையம் தான் எடுக்கும்.

    எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கொடுத்த பேச்சாளர் பட்டியல் ஏற்கப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.

    Next Story
    ×