search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்கு நாளை வரும் ஜனாதிபதி திரவுபதியை விமான நிலையத்தில் வரவேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    சென்னைக்கு நாளை வரும் ஜனாதிபதி திரவுபதியை விமான நிலையத்தில் வரவேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளான நாளை மறுநாள் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
    • ஜனாதிபதி வருகையையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன் முறையாக திரவுபதி முர்மு சென்னைக்கு நாளை மாலை வருகிறார்.

    இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை 6.50 மணிக்கு வந்து இறங்கும் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

    வரவேற்புக்கு பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

    மறுநாள் (6-ந்தேதி) காலை 10 மணிக்கு காரில் புறப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த பட்டமளிப்பு விழா சில நிர்வாக காரணங்களுக்காக கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நடத்தப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார்.

    அங்கு முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    முக்கிய பிரமுகர்களின் சந்திப்புக்கு பிறகு தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன் பிறகு மாலை 7 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு விருந்து அளிக்கிறார்.

    இந்த விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளுமாறு நேற்று முன்தினம் கவர்னரின் செயலாளர் நேரில் சென்று அழைப்பு கொடுத்து உள்ளார். இதனை ஏற்று விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இதே போல் மூத்த அமைச்சர்களும் விருந்தில் பங்கேற்க உள்ளனர். இது தவிர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார், தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    அன்றிரவும் கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி 7-ந்தேதி காலையில் காரில் சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார்.

    அங்கு ஹெலிகாப்டர் மூலம் காலை 9.55 மணிக்கு புதுச்சேரி மாநிலம் செல்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜனாதிபதி அன்றிரவு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நீதிமன்ற விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    பின்னர் 8-ந்தேதி மாலை 5.05 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி வருகையையொட்டி டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி தீவிரமாக கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை 2 முறை நடத்தப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளான நாளை மறுநாள் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இதேபோன்று கவர்னர் மாளிகை, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன் பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை மதியம் முதுமலைக்கு செல்கிறார்.

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்லும் அவர் முகாமில் பாகன் தம்பதிகள் பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவித்து உரையாடுகிறார்.

    மேலும் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு வழங்குகிறார்.

    அங்குள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேசுகிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து மாலையில் சென்னை வருகிறார்.

    Next Story
    ×