search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறுமி தானியாவுக்கு வீட்டுமனை பட்டா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
    X

    சிறுமி தானியாவுக்கு வீட்டுமனை பட்டா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    • சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
    • 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    ஆவடி வட்டம், மோரை பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் -சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் தானியா அரியவகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.

    தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி தானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.

    அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8.2.2023 அன்று 2-வது முறையாக முக சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

    அதன் தொடர்ச்சியாக சிறுமி தானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் வழங்கப்பட்டது.

    அப்போது சா.மு.நாசர் எம்.எல்.ஏ. மற்றும் சிறுமி தானியாவின் பெற்றோர் உடன் இருந்தனர். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிடும் அடையாளமாக 9 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பா. இரு சம்மாளுக்கும், தீயணைப்போர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 120 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    Next Story
    ×