search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை
    X

    ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை

    • ஆசிரமம் மீது பல்வேறு சர்ச்சையான புகார்கள் எழுந்தது.
    • ஆசிரமம் தொடங்கியதில் இருந்து இதுவரை எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது.

    இந்த ஆசிரமம் மீது பல்வேறு சர்ச்சையான புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மன நலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது போன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஆசிரம பணியாளர்கள் உள்பட 8 பேரையும 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பராணி 8 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து 8 பேரையும் அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆசிரமம் தொடங்கியதில் இருந்து இதுவரை எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் விவரங்கங்கள் குறித்தும், பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்த 143 பேர் மற்றும் கோட்டக்குப்பத்தில் இயங்கி வந்த கிளை ஆசிரமத்தில் இருந்த 25 பேர் என 177 பேரை அதிகாரிகள் மீட்டு பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×