search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடிபோதையில் தொல்லை- கணவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவி
    X

    குடிபோதையில் தொல்லை- கணவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவி

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார்.
    • அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராயவேலூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது37). இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்களுக்கு பிளஸ்-2 மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி 2 பேரும் கூலித்தொழில் செய்து வந்தனர்.

    சண்முகவேல் குடிபழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனால் வேதனையடைந்த அழகுசின்னு கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து மீண்டும் குடும்ப நடத்த அழைத்து வந்தார். சில நாட்கள் அமைதியாக சென்ற நிலையில் மீண்டும் மது குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். பொறுத்து பொறுத்து பார்த்த அழகுசின்னு கணவரை திரும்பி தாக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர் அருகில் இருந்த அரிவாளை எடுத்து சண்முகவேலை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அழகுசின்னு ராஜதானி போலீசில் சரண் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தொல்லை கொடுத்த கணவரை மனைவியே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×