search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் - அன்புமணி
    X

    மதுபழக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் - அன்புமணி

    • காவிரியில் செல்லும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்று கேட்கிறோம்.
    • இந்தியாவிலேயே அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான்.

    தருமபுரி:

    தருமபுரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை இன்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

    தருமபுரி மாவட்டத்தில் அதியமான் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகின்றது. இதில் 936 அணிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 14 ஆயிரம் இளைஞர்கள் விளையாடுகிறார்கள்.

    இந்த போட்டி 2 வாரம் தொடர்ந்து நடைபெறும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல்பரிசாக உள்பட மொத்தம் ரூ.10 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் அதிகளவில் நடைபெற வேண்டும். அப்போதுதான் விடுமுறை காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை வேறுவிதமாக திசை திரும்பாமல் விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள். அதற்காக தமிழ்நாடு முழுவதும் கோடைகாலத்தில் அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் அரசு நடத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் மது, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அதேபோல இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமும் நிறைய விபரீத விளையாட்டுகளாலும் இளைஞர்கள் திசை மாறி செல்கின்றனர். அதனை மாற்ற இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கையாக அரசுக்கு வைத்தோம். அவ்வப்போது இதுகுறித்து அறிவிப்புகளும் வந்தன. ஆனால் இதுவரை இந்த திட்டம் நிறைவேற்றவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. காவிரியில் செல்லும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்று கேட்கிறோம். அது என்ன மிகபெரிய தவறா, காவிரி ஆறு கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு முதன்முதலாக தருமபுரி மாவட்டம் வழியாக தான் வருகிறது.பிறகு தான் சேலம் மாவட்டத்திற்கு செல்கிறது. ஆனால், ஆண்டுக்கு 220 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. இந்த தண்ணீரில் 3 டி.எம்.சி. அளவில் நீர் இருந்தாலே போதுமானது தருமபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரப்பி விடலாம். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை, விவசாயம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீர்தது விடலாம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பா.ம.க. சார்பிலும், எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் பலமுறை சட்டசபையிலும் பலமுறை அழுத்த கொடுத்துள்ளோம். இரு கட்சிகளின் முதலமைச்சரையும் மாறிமாறி நாங்கள் சந்தித்து அழுத்தம் கொடுத்தும், காவிரி உபரிநீர் நிரப்பும் திட்டம் குறித்து இதுவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதேபோல 38 மாவட்டங்களில் 15 வடமாவட்டங்கள் 10 மற்றும் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கடந்த 40 ஆண்டுகாலமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருந்தால் கள்ளசாராயம் இருக்காது என்று அரசு கூறிவந்தது. மரக்காணம் பகுதியில் சாராயம் குடித்து 23 பேர் இறந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. எனவே, மதுவால் இங்கு அதிகளவில் கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    டாஸ்மாக் கடையில் ரூ.10 பாட்டிலுக்கு அதிகமாக வாங்குகிறார்கள் என்று புகார் அதிகளவில் எழுந்துள்ளன. ஆனால், மது தயாரிக்கும் ஆலையில் இருந்து நேரடியாக மது விற்பனை நடைபெறுவதால் அதிகளவில் கணக்கில் காட்டாத வகையில் சம்பாதித்து வருகின்றனர். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும், மது தயாரிக்கும் கம்பெனிகளின் மின் அளவுகள் மூலம் அதில் 100 யூனிட்டுக்கு எத்தனை மதுபாட்டில்கள் தயாரிக்க முடியும் என்று கணக்கீட்டு அதன்படி விசாரணை நடத்த வேண்டும். டாஸ்மாக் மூடப்படும் என்று இரு கட்சிகளும் மாறிமாறி கூறிவந்தாலும், இதுவரை முமுமையாக மதுவிலக்கு அமல்படுத்தாமல் திராவிட கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

    கடந்த தலைமுறை மதுவால் சீரழித்துவிட்டது. அடுத்த தலைமுறையாவது மதுவால் சீரழியாமல் பாதுகாக்க பூரண மதுவிலக்கு கொண்டுரப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் சந்து கடைகளில் மதுவிற்பனை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    10.5 சதவீதம் இடஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதற்கான உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.

    Next Story
    ×