search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. பொதுக்குழு  நாளை கூடுகிறது
    X

    அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுகிறது

    • அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தலைமைக் கழகத்தில் கூடியது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை காலை கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆன பிறகு நடைபெறும் பொதுக்குழு என்பதால் கூட்டத்தை எழுச்சியுடன் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தேர்தல் கமிஷனின் சட்டதிட்ட விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவும், 2 முறை செயற்குழு கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தலைமைக் கழகத்தில் கூடியது.

    இதைத் தொடர்ந்து இப்போது அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நாளை காலை 10.35 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த பொதுக்குழு நடைபெறுவதால் ஜெயலலிதா இருந்தபோது என்னென்ன நடைமுறைகளை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மகளிர் அணி உள்பட 10 பேர்கள் வரை பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் இறுதியாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார்.

    அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வின் கூட்டணி நிலைப்பாடு பற்றி ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். வர இருக்கும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து

    அ.தி.மு.க. விலகியுள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணி வியூகம் எவ்வாறு அமையும் என்பதை எடப்பாடி பழனிசாமி இந்த பொதுக்குழுவில் சூசகமாக தெரிவிப்பார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இதில் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்பதை பறைசாற்றும் வகையில் தீர்மானம் கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    முதன் முறையாக பொதுச் செயலாளர் ஆன பிறகு இந்த பொதுக்குழு நடைபெறுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு - செயற்குழு வாழ்த்து தெரிவித்து முதல் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்ற உள்ளனர்.

    மிச்சாங் புயல் மழை மற்றும் தென் மாவட்ட வெள்ளப் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வருவதுடன் தி.மு.க. அரசு மேற் கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலும் ஒரு தீர்மானம் கொண்டுவர உள்ளனர்.

    இவை உள்பட 17-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் கொண்டு வரப்படும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.


    கடந்த வருடம் ஜூன் 22-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு வானகரத்தில் கூடிய போது அ.தி.மு.க.வில் இரட்டை தலைமைகள் இருந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமைகளாக இருந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்ற அந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று கோர்ட்டு கூறி உள்ள நிலையில் தேர்தல் கமிஷனும் அப்போது நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டது.

    இந்த சூழலில் இப்போது அ.தி.மு.க.வின் செயற்குழு- பொதுக்குழு கூட்டம் வெகு விமரிசையாக வானகரத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்க 2,800 பேர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பகுதி கழக, பேரூர் கழக நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள். இது தவிர முக்கிய விருந்தினர்களுக்கும் சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகி முதன் முறையாக பொதுக் குழுவில் கம்பீரமாக பங்கேற்க உள்ளதால் அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேளதாளம் முழங்க தொண்டர்கள் வழி நெடுக நின்று அவருக்கு வர வேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

    Next Story
    ×