search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சென்னை- கோட்டயம் இடையே 7 சிறப்பு ரெயில்கள்
    X

    சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சென்னை- கோட்டயம் இடையே 7 சிறப்பு ரெயில்கள்

    • டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
    • சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந்தேதி நடக்கிறது.

    மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளான இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள்(வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    இதுபோல் கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 20-ந்தேதி, 27-ந்தேதி, டிசம்பர் 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந் தேதி, 25-ந்தேதி, மற்றும் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்(எண்:06028) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை10.30 மணிக்கு வந்தடைகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

    இதேபோல் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு வந்தே பாரத் ரெயில் (எண்:06031) நாளை (20-ந்தேதி) இயக்கப்படுகிறது. நாளை மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காட்பாடியில் மட்டும் நின்று இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதேபோல் பெங்களூரில் இருந்து மறுநாள் (21-ந்தேதி) இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரெயில் (எண்:06032) மறுநாள் (22-ந்தேதி) காலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

    Next Story
    ×