search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல்- மீனவர் படுகாயம்
    X

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல்- மீனவர் படுகாயம்

    • மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு செருதூர் மீனவர்கள் 4 பேர் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் பாலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் ராமேசுவரம் சுடுகாட்டம்பட்டி பகுதியை சேர்ந்த செங்கோல் பிராங்க்ளின் (வயது 34), ஜஸ்டின், அஸ்வால்ட் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இந்த மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் அவர்களை அங்கு மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். இலங்கை கடற்படையினர் கற்களை வீசியதில் மீனவர் செங்கோல் பிராங்கிளினின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், படகில் இருந்த மற்ற 3 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 4 மீனவர்களும் அவசர அவசரமாக கரை திரும்பினர்.

    இதையடுத்து நேற்று காயம் அடைந்த செங்கோல் பிராங்கிளினை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

    இதற்கிடையே மீன்துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் காயமடைந்த மீனவரை சந்தித்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த நிலையில் தற்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே கோடியக்கரை அருகே 10 நாட்டிக்கல் தூரத்தில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை செருதூர் மீனவர்கள் 5 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறித்து சென்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு செருதூர் மீனவர்கள் 4 பேர் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×