search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடு பணிகள்- விளையாட்டுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
    X

    செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடு பணிகள்- விளையாட்டுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

    • செஸ் ஒலிம்பியாட் சுடர் ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கப்படவுள்ளது.
    • செஸ் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாமல்லபுரம், பூஞ்சேரியில் இன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

    இந்த ஆய்விற்கு பின், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    44-வது செஸ் ஒலிம்பியாட் இதுவரை எந்த நாட்டிலும் இதுபோன்ற போட்டி நடத்தப்படவில்லை என உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிரதமர் 19.06.2022 அன்று டெல்லியில் இப்போட்டிக்கான ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்துள்ளார். இந்த ஒலிம்பிக் சுடர் 75 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் போட்டி நடைபெறுகின்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து வழங்கப்படவுள்ளது.

    இப்போட்டிக்காக சர்வதேச தரத்திலான 52-ஆயிரம் சதுர அடி பரப்பிலான நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கெனவே உள்ள 22- ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கமும் நவீனப்படுத்தப்படுகிறது. இதில் விளையாட்டு வீரர்களுக்காக 500 செஸ் போர்டுகள் அமைக்கப்படவுள்ளது. இப்போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. மின் வாரியம், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் பணிகளை மேற்கொள்ள 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினை தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்துள்ளார்.

    இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 4 அணிகள் , பிற நாடுகளிலிருந்து 227 அணிகள் பங்கேற்கவுள்ளன. வீரர்களின் நலன் கருதி சுகாதாரமான உயர்தர நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை மூலம் மேற்கொளப்படும்.

    தமிழ்நாடு முதலமைச்சர், இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 15 நாட்களுக்கான ரூபாய் 2 இலட்சம் காப்பீடு வசதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    Next Story
    ×